திருவாரூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவிலான ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவில்களில் ஒன்றான ஆழித்தேரோடும் வடக்கு இராஜ வீதியில் அமையப்பெற்ற தொன்மைமிக்க ஆலயம் ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவில்.
இவ்வாலயத்தில் வைகாசி விசாக திருவிழாவினையொட்டி ஸ்ரீபழனியாண்டவருக்கு அரிசுமாவு, திரவியபொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் முதலான வாசனை திரவிய நறுமனப் பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக்கொண்டு முருகப்பெருமானுக்கு உகந்த சண்முகா அர்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீபழனியாண்டவருக்கு அலங்கார தீபாரதனையும், மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை மனமுருக வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




















