திருவள்ளூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், நேற்றிரவு வாழையிழை மற்றும் வாழைப்பூ ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று திருப்பாச்சூர் அருகே வரும் போது அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அதில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிர் தப்பிய நிலையில் சிறு காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவ் விபத்துக் குறித்து திருவள்ளூர் தாலூகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு ஆந்திர மாநிலம் கடப்பா காவேலுபேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகேஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் தங்களின் நிலத்தில் விளைந்த வாழை இலை மற்றும் வாழைப்பூ ஆகியவற்றை சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மார்க்கெட்க்கு விற்பனை செய்வதற்காக சுமார் 11 மணியளவில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் லாரி சென்ற போது ஓட்டுநர் ஸ்ரீ ஹரியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் லாரியில் சிக்கி இருந்த ஓட்டுனர் ஹரி மற்றும் மகேஷ், கணேஷ், ஆகியோரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,
மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் அவ்விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















