கும்பகோணம், ஜூன். 27 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அடுத்த செருகுடி கீழ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடுப்போவதாக கூறி, அவர் வீட்டு முன்பாக தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக வந்த கீழ அக்ரஹார தெருவை சேர்ந்த பாண்டிதுரை என்பவர் அப்போது ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
அந்நிகழ்விற்கு பின்பு, அங்கிருந்து சென்ற பாண்டிதுரை தனது மகன்கள் மணிகண்டன், ஆண்டன் பாலசிங்கம், மற்றும் அவரது நண்பர் பிரவீன் நாத் ஆகியவருடன் மது அருந்தி விட்டு, போதையில் செருகுடி கீழத்தெரு பகுதிக்கு வந்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள ரமேஷ், அன்பழகன், சங்கர் ,ராஜசேகர், முத்து,ராஜு உள்ளிட்டவர்களின் வீடுகளையும், அங்கிருந்தவர்களையும், மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவைகளையும் அடித்து நொறுக்கிவுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அன்பழகன் மற்றும் சங்கரை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இத்தகவலறிந்து அச்சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் காவல்நிலைய காவலர்கள் அப்பிரச்சினைக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

























