கும்பகோணம், ஜூன். 01 –
கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அருள்மிகு ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக முன்னிட்டு அத்திருக்கோயிலில், கட்டுத் தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
இத்திருத்தலத்தில் அன்னை பராசக்தி தவம் செய்ததாகவும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலித்து வருவதாகவும், மேலும் அத்திருத்தலத்தில் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமாகவும் விளங்கி வருவதாகவும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் இதுவென தல வரலாறு தெரிவிக்கிறது.
இத்தகைய சிறப்புப் பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல் இவ்வாண்டும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி தேரில் எழுந்தருள கட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கட்டு தேரை வடம் பிடித்து இழத்து வந்தனர்.






















