புதுக்கோட்டை, ஆக. 21 –

தஞ்சாவூர்  மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெல் ரகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மதுக்கூர் வேளாண் உதவி இயங்குநர்  திலகவதி தகவல் தெரிவித்துள்ளார்.

கருடன் சம்பா அரிசி

தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதில் குறிப்பாக மரபுசார் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 21- 22 ஆம் நிதி ஆண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் அறுபதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி கருடன் சம்பா, கருங்குருவை கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள், மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என்பதால் இந்த மரபு சார் நெல் ரகங்களை திரட்டி பல மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 33 அரசு விதைப் பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுனி, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய ரகங்களில் கருப்பு கவுனி மற்றும் கருடன் சம்பா தலா 200 கிலோவும் மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

மேலும் இந்த ரக நெற்கள் ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் மட்டுமே விவசாயிக்கு வழங்கப்பட உள்ளது. எனவே மதுக்கூர் வட்டாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட 3 பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 12. 50 என்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக வேளாண் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்படி, வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அறிவுறுத்தல் படியும் பாரம்பரிய விதை நெற்கள் உற்பத்தி செய்யப்பட்டு உண்மை நிலை விதைகளாக மரபு சார் நெல் ரகங்கள் இனத்தூய்மையுடனும் விதை தரத்துடனும் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருடன் சம்பா

காடை குழந்தான்  என்று அழைக்கப்படும் இந்த ரகமானது நெல்மணி சிவப்பாகவும் வெள்ளை அரிசியுடன் இருக்கிறது. மேலும் இவ்வகை நெல் பயிர் மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும். அதிக பராமரிப்பின்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி நேரடி விதைப்பின் மூலமாகவும்  ஒற்றை நாற்று நடவு முறையிலும் ஏக்கருக்கு 3 1/2 முதல் 4 டன் மகசூல் கொடுக்க வல்லது.

நாலு முதல் ஐந்து அடி உயரம் வளரக்கூடியது *மிரட்டும் நெல் மகசூலுக்கும் மித மிஞ்சிய வைக்கோலுக்கும் இந்த கருடன் சம்பா .ஏற்றது. எனவே, விவசாயிகள் தங்களுடைய உணவு தேவையுடன் கால்நடைகளின் உணவு தேவையினையும்* 140 முதல் 159 நாள் வயதுடைய கருடன் சம்பாரகத்தின் மூலம் சாதிக்க முடியும்.

கருப்பு கவுனி, அரிசிகளில் ராணி

ஆறடி உயரம் வளரும் 159-160 நாள் நெல்பயிரான இதில் ஆந்தோசயனின் எனும் அரிய சத்து அதிக அளவில் உள்ளது. அரசர்களால் மட்டும் பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பட்டுள்ளது. சத்து நிறைந்தது. ஏக்கருக்கு 30 மூட்டை தரும். அரிசி மகசூல் 1200 kg வரை கிடைக்கும் ஒரு கிலோ 150 முதல் 200 வரை அரிசி விற்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 150 ரூபாய்க்கு விற்றால் கூட இரண்டு லட்சம் வரை ஏக்கருக்கு லாபம் தரக்கூடியது. இயற்கையான முறையில் சாகுபடி செய்து செலவின்றி 2 லட்சம் வரை லாபம் எடுக்க வாய்ப்புள்ள ஒரே பாரம்பரிய நெல் ரகம் கருப்பு கவுனி மட்டுமே.

மாப்பிள்ளை சம்பா

ஆறடி உயரம் ஆறு மாச காலம் வளர்ந்து சிவப்பு மோட்டா ரக அரிசி தரும் ரகம் தான் இது. வறட்சிக்கும் வாடாது கனமழைக்கும் சாயாது அழுகாது பூச்சி நோய் தாக்குதல் அதிகம் வராது. இயற்கையான முறையில் செலவின்றி லாபகரமான நெல் சாகுபடிக்கு மாப்பிள்ளை சம்பா ஒரு எடுத்துக்காட்டு. நல்ல பராமரிப்பில் ஒரு கதிருக்கு நானூறு நெல்மணிகள் வரை வர வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 40 முதல் 60 மூட்டை வரை மகசூல் தரும் .அரிசியாக ரெண்டு டன் மகசூல் எடுக்கலாம். ஒரு கிலோ மாப்பிள்ளை சம்பா அரிசி ரூ90 முதல் ரூ120 வரை விற்கிறது.

எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் மேற்கண்ட பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி விதைகளை தங்களுக்கு என சேமித்து வைக்கவும் அரிசி ஆக்கி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறவும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மேற்கண்ட 3 பாரம்பரிய ரகங்களும் 500 கிலோ மட்டுமே வரப் பெற்றுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here