கும்பகோணம், ஜூலை. 31 –
கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவிடைமருதூர் தாலுகா வண்ணக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவர் சிங்கப்பூரில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மேலும், இவரது மனைவி மற்றும் மகன்கள் வண்ணக்குடியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமலிங்கம் வண்ணக்குடியில் புதியதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டில் நரசிங்கம்பேட்டை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த பரசுராமன் என்ற 32 வயதுடைய கொத்தனார் அக்கட்டத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை புதிய வீட்டின் மாடிப்படி அருகே கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த இராமலிங்கத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலயறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர்சாதிக் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பரசுராமனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தவுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் வண்ணக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















