காஞ்சிபுரம், ஜூலை. 24 –
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும். 9 மணியை தாண்டி வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு மேல் வந்த மாணவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வர்கள் கிராமப்பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்கு வர சரியான பஸ் வசதி கிடைக்காததால் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் தாமதமாக வந்ததாக கூறி தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியதுதான் என்று கண்ணீர்விட்டபடி தேர்வர்கள் அங்கிருந்து சென்றது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துவிட்டது.





















