பொன்னேரி, ஜூலை. 06 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பேடு ஊராட்சி, இந்த ஊராட்சியில் உள்ள லிங்கப்பையன் பேட்டையில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது பட்டாச்சாரியார்கள் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட திரளான பக்த கோடிகள் அம்மனை தரிசித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லிங்கபையன்பேட்டை, பெரும்பேடு, கொளத்தூர், மனோபுரம், அரவாக்கம், உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தவாறு பங்கேற்றனர்.






















