தஞ்சாவூர், மே. 01 –
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளில், 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும், திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலர்கள் மூலம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தோட்டக்கலை அலுவலர்கள் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு துறையின் மூலம் இவ்வருடம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் அதற்கான தகுதிகள் போன்றவை பற்றி எடுத்துக் கூறினார்.
மேலும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் ஆலத்தூர் சிவன் கோவில் மரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்களை பயன்படுத்தி அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தில் கிராம மேம்பாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளும் சந்திக்கப்படும் எனவே விவசாயிகள் கிராம மேம்பாட்டிற்கு தேவையான சாலைகள் கழிப்பறைகள் கட்டுதல் ஆகியவற்றுடன் வேளாண் துறை திட்டங்களையும் பயன்படுத்தி பயன்பெறும்படி விவசாயிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி மற்றும் செயலாளர் ஆகியோரால் வரவு செலவு கணக்குகள் எடுத்துரைக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் மற்றும் ராஜ் ஆகியோர் இவ்வருடம் ஆலத்தூர் ஊராட்சி மன்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள சாலைகள் மட்டும் 100 நாள் திட்ட பணிகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் திட்டங்களை பற்றி எடுத்துக்கூறியதோடு தற்போது பரவலாக தென்னையில் காணப்படும் தண்டு அழுகல் நோய் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எடுத்துக்கூறி தொழில்நுட்ப பிரசுரங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மூலம் விவசாயிகளுக்கு வழங்கினார்.
வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கலைவாணி வேளாண் பொறியியல் துறைக்கான மானியத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். கூட்டத்தில் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி. வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் கவுன்சிலர்கள் செல்வராஜ், கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
























