திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் தனிப்பட் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 57 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 23 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 66 மனுக்களும் ஆக மொத்தம் 206 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டு அம்மனுக்களின் மீது விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலை வாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து ரூ. 6.25 இலட்சம் கடன் தொகையாக பெற்ற 7 பயனாளிகளுக்கான மானியத்தொகையாக ரூ.1,66,666 ற்கான காசோலைகளை 7 பயனாளிகளுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,772 வீதம் ரூ.63,860 மதிப்பீட்டிலான ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை 5 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாகளுக்கான உரிமைச்சட்டத்தின்படி மனவளர்ச்சி குன்றிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ் களை அம்மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்களிடமும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் காதொலிக் கருவிவேண்டி நேற்றைய குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளியின் மனுவினை ஏற்று அதன்மீது பரிசீலனை செய்து உடனடியாக அம்மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.3,058 வீதம் ரூ.6116 மதிப்பிலான இரண்டு காதொலி கருவிகளை இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட சார் பயிற்சி ஆட்சியர், ஏ.பி.மகாபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக பொதுப்பிரிவு உதவியாளர் சி.வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிக் நல அலுவலர் ச.பாபு, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.





















