குன்றத்தூர், ஏப். 06 –
குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடப்பதை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் முன்னெச்சிக்கை நடவடிக்கைக்குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.
குன்றத்தூர் முருகன் கோவில் வரும் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, மின்சாரம், தீயணைப்பு, மருத்துவம் என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.சைலேந்திரபாபு தலைமையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் வருகையையொட்டி எந்த மாதிரியான முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களை அனுமதிப்பது, வாகனங்களை நிறுத்தும் இடம், மருத்துவ முகாம் நடத்துவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது கும்பாபிஷேகத்தின் போது மின்தடை ஏற்படாமலும் தேர் ஊர்வலத்தின் போது மின் இணைப்புகளை துண்டித்து உடனடியாக மின் இணைப்புகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கும்பாபிஷேகத்தின் போது அன்னதானம் செய்பவர்கள் பாலித்தீன் கவர்களை உபயோகப்படுத்தாமல் பாக்கு மட்டையை உள்ளிட்ட மறுசுழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.






















