சென்னை, மார்ச். 12 –
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று (11.03.2022) சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்து செய்தித்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் தனது தலைமையுரையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டலத்திற்குட்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிலைகள், நினைவகங்கள் மற்றும் மணிமண்டபங்கள் பராமரிப்புப் பணிகள் குறித்தும், அதேபோல தமிழரசு இதழுக்கான சந்தாக்களை அதிகளவில் சேர்ப்பது குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நம்முடைய சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள் இவர்களுக்கான சிலைகள், பல்நோக்கு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலமாக பிரிக்கப்பட்டு இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு அதன் கீழ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரில் தொடர்பு கொண்டு தமிழரசு இதழுக்கான சந்தாக்களை அதிகளவில் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை இந்த மாதத்திற்குள் எய்திட வேண்டும். அனைத்துத் துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழரசு இதழ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகள் நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். நினைவகங்கள் குறித்து சாலைகளில் முன்கூட்டியே பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும்.
முதலமைச்சர் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், நேரலைக் காட்சிகள் மற்றும் அரசாணைகள் இவைகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் அதிகளவில் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் பாலமாக செயல்பட்டு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், 6 மண்டலங்களில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன, இனி மாதந்தோறும் மண்டல இணை இயக்குநர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் முன்னிலையுரையாற்றி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர்கள் தி.அம்பலவாணன், ச.பாண்டியன் மற்றும் இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



















