கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இச்செயலால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவதற்கு வன்னியர் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்படம் கும்பகோணத்தில் இரு திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், அங்கு டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே திரையரங்கு முன்பு சூர்யா ரசிகர்கள் பட்டாசுகள் கொளுத்தி உற்சாகமாக படம் வெளியீட்டை வரவேற்றனர். தொடர்ந்து காலை 11 மணி காட்சி வழக்கம் போல தொடங்கியது, இந்நிலையில் வன்னியர் சங்கம், நடிகர் சூர்யா பிரச்சனை தொடர்பாக, மோதல் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் திரைப்படத்தை பார்க்க அவரது ரசிகர்களை தவிர பொதுமக்கள் யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே, கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், வன்னியர் சங்கத்தை சேர்ந்த மணி மற்றும் பிரகாஷ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்று, வன்னியர் சமுதாயாத்தினரை தரக்குறைவாக, தனது ஜெய்பீம் படத்தில் காட்டியமைக்கு, வன்னியர் சமுதாய மக்களிடம் பொது மன்னிப்பு கோர வலியுறுத்தியும், அவரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மை தீயிட்டு எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இது சூர்யா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















