பொன்னேரி, மே. 01 –
பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழாவானது கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித மகிமை மாதா தேர் பவனியானது வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. அன்னை மகிமை மாதா, கிறிஸ்து இயேசு, புனிதஅந்தோணியார், சவேரியார், உள்ளிட்ட சொரூபங்கள் வண்ணமலர்களாலும் மற்றும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இதில் பங்கு மக்கள் துதி பாடல்களை பாடி மலர்தூவி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக எல்லையம்மன் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டு வான வேடிக்கைகளுடன் குழந்தைகள் சிறுவர்கள் நலம் பெற வேண்டி மாதாவின் சொரூபத்தில் வைத்து ஆசிர்வாதம் பெற்றனர். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்பவனி விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இவ்வருடம் இன்று நடைபெற்ற இவ்விழாவில் சென்னை பொன்னேரி கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிருத்துவர்கள் மற்றும் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னை மகிமை மாதாவை தரிசனம் செய்தனர்.






















