தஞ்சாவூர், மே. 30 –
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகள் இன்றி குறித்த நேரத்தில் செய்திடவும், மேலும் கிராம புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடவும் மேலும் நிலையான வருமானத்தை அவர்கள் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும். இம்மையங்கங்களுக்கு ரூ. 8 இலட்சம் முதலீடு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. அதில் 50 சதவீத மானியமாக அதிகப்பட்சமாக அரசு சார்பில் ரூ. 4 லட்சம் வழங்கப்படுகிறது.
இம்மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்றப் பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும் என்ற நிபந்தனையும் உள்ளது.
மேலும் மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளரால் ( வே.பொ ) முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்த த்தொகையினை செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் ( வே.பொ ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும் என்ற விதியும் உள்ளது.
மேலும் இத்திட்டம் குறித்த விவரங்களை தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்தவர்கள் தஞ்சாவூர் உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எண் 15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் – 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாப்பேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களைச் சார்ந்தவர்கள் கும்பகோணம் உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலூகா, கும்பகோணம் – 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்கை சார்ந்தவர்கள் பட்டுக்கோட்டை உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை – 614 601 என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.