திருவாரூர், ஜன. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில் முதன் முதலாக அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.
சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயமாகும்.
பல்வேறு புராதன சிறப்புகளைக் கொண்ட அவ்வாலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளின் சிறப்பினை தேவார, திருவாசக பதியங்களில் நாயன்மார்களால் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகளில் உலக நன்மைவேண்டி அங்கபிரதக்ஷிணம்; வழிபாடு நடத்தும் வகையில் தேவகுமார் என்ற 45 வயதுடைய சிவபக்தர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ஆழித்தேர் நிலையடி அமைந்துள்ள கிழக்கு ராஜவீதியில் உள்ள தேரடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டினை நடத்தி அங்கிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள தேர் நிலையடி வரையில் தனது வேண்டுதலான அங்கபிரதக்ஷிணம் வழிபாட்டினை தொடங்கினார். இதுவரை யாரும் செய்யப்படாத இத்தகைய அங்கபிரதக்ஷிண வழிபடானது 3 மணி நேரம் வரை நீடித்து இரவு 1 மணிக்கு நிறைவடைந்தது.
சிவபக்தர் தேவகுமார் அங்கபிரதக்ஷிணம் வழிபாட்டின் போது சிவனடியார்கள், ஆன்மிகவாதிகள் சாலையினை சுத்தம் செய்தும், தேவார, திருவாசக பதியங்களை பாடியும், ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷமிட்டும் பின்தொடர்ந்தனர்.