கும்பகோணம், மே. 07 –
கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் எம் ஜெயகுமாரி வரவேற்க, சிறப்பு விருந்தினராக, திருவாரூர், மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கிருஷ்ணன் கலந்து கொண்டு கடந்த 2018ம் ஆண்டு கல்வியியல் படிப்பு முடித்த, 208 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவராற்றிய உரையில் பட்டம் பெறும் உங்கள் அனைவருக்கும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்நாள் அமைந்துள்ளது. அது போலவே நீங்கள் கல்வி கற்க உதவியாக இருந்த கல்வி நிறுவனத்தையும், உங்கள் ஆசிரிய பெருமக்களையும், உங்கள் பெற்றோர்களையும் என்றைக்கும் நினைவில் வைத்து போற்றிட வேண்டும். எனவும், மேலும் அவர்களது பெயரைகளை காப்பாற்றி, பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்றார்.
தொடர்ந்து, துணை முதல்வர்; கே சரவணன் நன்றி கூறினார் இப்பட்டமளிப்பு விழாவில், ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் பேராசிரிய பெருமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, திருவாரூரில் அமைந்துள்ள தமிழக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம் கிருஷ்ணன்,
தமிழகத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் 27 துறைகளுடன், 64 படிப்புகளுடன் கல்விப்பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 2009ம் ஆண்டு மத்திய பல்கலைக்கழக எண்ணிக்கை 38 ஆக இருந்தது தற்போது 48 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2700 மாணவ மாணவியர்கள் கல்வி பயில்கிறார்கள்.
ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 700 ஆக உள்ளது (சுமார் 25 சதவீதம்) இப்பல்கலைகழகத்தில் சேர அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு உண்டு, நடப்பாண்டு முதல் இத்தேர்வினை தமிழிலும் எழுத அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக மாணவர்கள் கூடுதலாக இவ்வாண்டு சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான படிப்புகளுக்கே மத்திய பல்கலைக்கழகம் முன்னுரிமை அளிக்கும் என்றும், விரைவில் இப்பல்கலைக்கழகத்தில், ஒரு லட்சம் அயல்நாட்டு பறவைகள் வரும் கோடிக்கரை அருகே அமைந்துள்ளதால், பறவைகள் குறித்த ஆராய்ச்சி படிப்பும், அதுபோலவே நாகை கடற்கரை பகுதி அருகே அமைந்துள்ளதால் பேரிடர் கால மேலாண்மை குறித்த படிப்பும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






















