திருவாரூர், மே. 08 –
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா காலை முதலே தொடர்ந்து நடைபெற்றது.
தொடர்ந்து மாலை நடைபெற்ற பத்மஸ்ரீ ஏ. கே. சி. நடராஜன் அவர்களின் பாராட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் கலந்துகொண்டார்.
திருவாரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடகர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமைப்பின் தலைவரும் தினமலர் ஆசிரியருமான இராமசுப்பு கலந்துக் கொண்டு ஏ.கே.சி. நடராஜன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது பெற்றதற்கான பாராட்டு சான்றுடன் பொற்கிழியும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி. கே. வாசன், ஏ.கே.சி. நடராஜன் அவர்களை பாராட்டி பேசினார். மேலும் அவர் பேசுகையில் வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகள் இயல் இசை நாடக கலைஞர்களுகு பக்கபலமாக இருந்து அவர்களுக்கான வளர்ச்சி பாதையை அமைத்து தரவேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் பாராட்டு பெற்ற பத்மஸ்ரீ ஏ.கே.சி.நடராஜன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் கூறினார். விழாவில் காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாக் குழுவின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள், சங்கீத பிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.