பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. அவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46 ஆவர்கள்.
மேலும் அவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மகா மாரியம்மன் கோயில் கட்டும் பணியை துவங்கினர்.
அந்தக் கோயில் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே இவர்களுக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனையடுத்து அதே பகுதியில் விநாயகர் கோயில் மற்றும் மயிலை வேல்முருகன் கோயில் என தனித்தனியே ஆளுக்கு ஒரு கோயிலாக போட்டிப்போட்டுக் கொண்டு கட்டத் தொடங்கினர்.
அதனையடுத்து சகோதரர்கள் மூவருக்கும் இடையே கோயில் தொடர்பாக மோதல் முற்ற துவங்கியது. அதனால் ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை சமாதானப்படுத்த ஏற்பாடு செய்தனர்.
இருந்தும் மூவரும் சமாதானம் அடையவில்லை. மூன்று கோயில்களின் திருப்பணிகள் முடிவுற்று எந்த கோயில் கும்பாபிஷேகம் முதலில் நடத்துவது என முடிவெடுக்கும் தருவாயில் அதிலும் பிரச்சனை கிளம்பியது. இளங்கோ என்பவரால் கட்டி முடிக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதன்படி ஏற்பாடு செய்து கொண்டிருந்த பொழுது அதையறிந்த மற்ற இரண்டு சகோதரர்களும் அவர் நடத்தும் அதே தேதியில் நாமும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மற்ற சகோதரர்கள் மயிலை வேல்முருகன் மற்றும் சுந்தர விநாயகர் ஆகிய கோயில்களுக்கும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து அதன்படி இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் போட்டி கும்பாபிஷேகம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
அண்ணன் தம்பி போட்டி கும்பாபிஷேகத்தால் ஏதும் பிரச்சினை ஏற்படும் என்ற நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கிடையே எவ்விதப் பிரச்சினைகளும் எழாது இனிதே அவர்கள் மூவர் கட்டிய திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் இனிதே நடைப்பெற்றது.