திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியம்பட்டி அருவங்காடு புதூர் செக்கடி கல்நாட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த (எஸ்டி) சி.ரோகிணி தலைமையில் மாணவிகள் தங்களுக்கு எஸ்டி சாதிச்சான்று வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. மேற்படிப்புகளும் தொடர முடியவில்லை. எனவே மலையாள சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ் வழங்கினால் உதவியாக இருக்கும் எனவே உடனடியாக எஸ்டி சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை செய்து எஸ்டி சாதிச்சான்றிதழ் வழங்க திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேலுக்கு உத்தரவிட்டார்.