காஞ்சிபுரம், ஜன. 23 –
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஒன்றிய அரசும், தமிழக அரசும் பல்வேறு கட்டுபாடுகள் விதித்து கொரோனா பரவல் தொற்றைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை 1100 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரங்கசாமிகுளம், தேரடி, காந்தி சாலை, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், பூக்கடைசத்திரம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்து இன்று தை மாதத்தின் முதல் சுபமுகூர்த்தம் என்பதால் பெரும்பாலான மக்கள் திருமணத்திற்க்கு செல்வதாக கூறி வெளியே சுற்றி திரிகின்றனர். கடந்த இரண்டு வாரங்களை விட இந்த வாரம் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





















