சீர்காழி, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரமநாராயணன் பெருமாள் தனது இடது காலை வான் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறார். மூலவர் பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 11- ஆம் நாள் முக்கிய நிகழ்வாக தெப்போற்சவம் நடந்தது.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தாடாளன் பெருமாள் ஆண்டாளுடன் தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து தெப்பக் குளத்தில் 5 முறை பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார்.இதில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.