காஞ்சிபுரம், ஏப். 05 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாத்தனஞ்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைமிகு அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் புணரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வழக்கம் போல் இன்று காலை அங்கு வந்த கட்டுமான பணியாளர்கள் அத்திருக்கோயில் அருகே தொட்டி கட்டுவதற்காக சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிவுள்ளனர்.
அப்போது, பள்ளத்தின் ஒரு புறத்தில் பானை வடிவில் முதுமக்கள் அக்காலத்தில் பயன்படுத்தி வந்த தாழி தென்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, உடனடியாக வருவாய்துறையினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் அத்திருக்கோயில் பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அத்தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த அரசு அலுவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இத்தாழி எந்த நூற்றாண்டைச் சார்ந்ததென அவர்கள் மேற்கொண்டு வரும் முழு ஆய்வுக்குப் பின்பே தெரிய வருமென் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.