குடவாசல், செப். 23 –
குடவாசலில் இன்று டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடமும், நிரந்தர இடமும் வேண்டும் என்றவாறு கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஆனால் இக்கல்லூரிக்கான சொந்த இடம் மற்றும் கட்டடங்களுக்கு அரசின் சரியான திட்டமிடல் இல்லாமல் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் எட்டு நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்லூரி வாடகைக்கு இருப்பது போல அந்த பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆகவே தற்போதைய அரசாங்கம் உடனடியாக குடவாசல் பகுதியில் இந்த கல்லூரிக்கு என தனி இடத்தினை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும் என்றும், தற்போது தேர்வு செய்துள்ள இடம் குடவாசலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லூர் பகுதியாகும் இங்கு சென்று வர போக்குவரத்திற்கு வசதிகள் குறைவு என்பதால் தொடர்ந்து இந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் இன்று குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 300- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சில மாணவர்கள் சுவர் ஏறி குதித்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். அதனால் சற்று பட்டமான நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் குருநாதன் தலைமையில் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மாணவர்களிடம் வட்டாட்சியர் உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நல்ல முடிவினை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.