திருவாரூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத ஸ்வாமி ஆலயம் சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இரதஸப்தமியை முன்னிட்டு இவ்வாலயத்தில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று காலை நடைபெறுவதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேருக்கு ஸ்ரீ லலிதாம்பிகை சமேதராக மேகநாத சுவாமி எழுந்தருளினார். பின்னர் திருத்தேரில் எழுந்தருளிய அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தேரோட்ட விழாவில் வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீசத்யஞான மகாதேவதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தேர் சக்கரம் மற்றும் தேர் பீடத்திற்கு சந்தனம், குங்குமம் பூசி மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தை பிடித்து ஆலய நான்கு ரதவீதிகளில் பக்தி கோஷங்களுடன் இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர். நாளை இரத ஸப்தமியை யொட்டி ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள குரியபூஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.