திருவாரூர், ஏப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்துதந்து உலக அளவில் கொண்டு சென்றவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் இரண்டாவதாக  அவதரித்த ஸ்ரீசத்குரு தியாகராஜர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள இல்லம் ஒன்றில் கிபி.1767ம் ஆண்டு சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளில் பிறந்தார். இவர் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனை களை இறைவன் மீது இயற்றியுள்ளார். குறிப்பாக ஸ்ரீஇராமபிரான் மீது ஸ்ரீசத்குரு தியாகராஜர் சங்கீத  கீர்த்தனைகளை பாடியுள்ளார். இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் மிகவும் பிரசித்திபெற்றது பஞ்சரெத்தின கீர்த்தனைகள்.

ஸ்ரீசத்குரு தியாகராஜர் வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.    பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவினையொட்டி அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து அவர் அவதரித்த ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரெத்தின கீர்த்தனைகளும், மேலும் அவரது பல்வேறு சங்கீத கீர்த்தனை களையும் பாடி இசை ஆராதனை செய்து ஸ்ரீசத்குரு தியாகராஜரை மனமுருக வழிபட்டனர்.

கர்நாடக சங்கீத இசை கலைஞர்களில் ஒருவரான ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் 262வது ஜெயந்தி விழா வரும் மே மாதம் 9ம் தேதி திருவாரூர் மேட்டூத்தெரு ஜென்ம பூமியில் கொண்டாடப்பட உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here