கும்பகோணம், மார்ச். 01 –

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதிசேஷன் முதல் காலத்தில் வழிபட்ட பெருமைக்குரிய கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 1008 சிவநாம அர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

  மகா பிரளத்தின் போது அமிர்தகுடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ நாககேஸ்வரர் என திருநாமம் பெற்றார்.

   தாயார் பிரஹந்நாயகி, ஆதிசேஷனும் தனது சாபம் நீங்க சிவராத்திரி நன்னாளில் முதல் கால பூஜையினை இத்தலத்தில் நடத்தியதாக வரலாறு .. மேலும், சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்ற போது அசரீரியின்படி சூரிய தீர்த்த்தத்தில் நீராடி நாகேஸ்வரசுவாமியை வழிப்பட்டு பேறு பெற்றார். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதிர்களால் நாகேஸ்வரரை வழிபடுவதை இன்றும் காணலாம். இங்கு சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது. சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் வந்தது.

   இத்தகைய சிறப்பு பெற்ற சிவதலத்தில் ஸ்ரீ ஆதிசேஷன் பூஜித்த சிவராத்திரி முதல் கால பூஜையில் ஏராளமான தம்பதிகள் மற்றும் பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அவர்களுக்கு தனித்தனியாக களிமண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம், வெற்றிலை, பாக்கு, திருநீறு, குங்குமம், வாழைப்பழம், ஊதுவர்த்தி, சூடம், வில்வம், ருத்திராட்சம் நைவேத்தியம், ஆகியவையும் வழங்கப்பட்டு சிவாச்சாரியார் 1008 சிவ நாமங்களை கூற, அவற்றை இதில் பங்கேற்ற பெண்களும், தம்பதியினரும் மனமுருக திரும்ப கூறி தங்களது பிராத்தனைகள் நிறைவேறவும், உலக மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும், வளங்களும் நோய் நொடி இன்றி நிம்மதியுடன் நீடோடி வாழவும் வேண்டியும் பிராத்தனை செய்து கொண்டு இத்தலத்தில் உள்ள இறைவன் நாகேஸ்வரையும், பெரியநாயகி அம்மனையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here