மயிலாடுதுறை, ஏப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை திருகந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமுமான பரிமளா ரங்கநாதர் ஆலயமாகும். மேலும் இவ்வாலயம் காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஸ்ரீரங்கம் அப்பாதுரங்கம் சாரங்கம் ஆகிய பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவதாக பரிமளரங்கம் என்று போற்றப்படுகிறது.

அச்சிறப்பு மிகு ஆலயத்தின் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஏழு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருவறை கோபுரம் ராஜகோபுரம் தாயார் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் ஊற்றி மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அச்சிறப்பு மிகு விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் அவ்விழாவில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here