கும்பகோணம், நவ. 18 –

கும்பகோணத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

கும்பகோணத்தில்  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளன்று வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கும். சிவன் கோயில்களில் அன்று மாலை அகல் விளக்குகள் வைத்து, கல்தூணில் மகாதீபம் ஏற்றி, சொக்கபனை கொளுத்தப்படும். இதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தருவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீப திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழைய மீன் மார்க்கெட் பெரிய தெரு, மடத்து தெரு, பாலக்கரை, தாராசுரம் மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது.

இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இது குறித்து, அகல் விளக்கு வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே மண் பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்கு, மேஜிக் விளக்கு, குபேர விளக்கு, பிரதோஷ விளக்கு, தட்டு விளக்கு, ரங்கோலி விளக்கு, ஓம் விளக்கு, ஸ்வதிக் விளக்கு, கற்பக விருட்ச விளக்கு உள்பட பல விதமான விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. மண் விளக்கு ஒரு ரூபாய் முதல் ₹50 வரை, டெரகோட்டா விளக்கு ₹5 முதல் ₹150 வரை விற்பனைக்கு உள்ளது. தொடர் மழையால் அகல்விளக்கு வியாபாரம் மந்தமாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here