ஆவடி, மே. 15 –
ஆவடி அடுத்துள்ள திருநின்றவூரில் வினைத் தீர்க்கும் விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநின்றவூர் கோமதிபுரம் ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டப்பட்டுள்ள ஸ்ரீ வினைத்தீர்க்கும் விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதற்காக ஆலயம் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 13-ஆம் தேதி முதல் மூலிகைகள் வாசனை திரவியங்கள் போடப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்றன.
இறுதி நாளான இன்று காலை கணபதி ஹோமம் கோ பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா சிவாச்சாரியார்கள் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்களுடன் கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கலச நீர் ஸ்ரீ வினைத் தீர்க்கும் விநாயகர் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உள்ளூர் மற்றும் வட்டாரப் பகுதியில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது