காஞ்சிபுரம், ஆக. 26 –

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் அண்மைக் காலமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி சோமசுந்தரம் தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியா சோமசுந்தரத்தின் வீட்டிற்கு சென்று அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பணியாற்றி வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்கள்  காவல்துறை உயர் காவல் அலுவலர்கள் கவனத்திற்கு சென்றதால் அவரை உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.

இதனை அறிந்த அப்பெண் அந்த காவல்நிலையத்திற்கும் சென்று அடிக்கடி சோமசுந்தரத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் அப்பெண்ணின் மாமாவிடம் அவரைப்பற்றி புகார் கூறியதாக தெரிகிறது. இதனால் பிரியா சோமசுந்தரத்தின் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா, அவரை தேடி அவர் பணிபுரியும் பெருநகர் காவல்நிலையத்திற்கே கடந்த 18-ஆம் தேதியன்று சென்று, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் சண்டை போட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே வைத்து சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையமே பரப்பரப்பாக மாறியதாகவும் அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த போலீசார் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல்துறை உயர் அலுவலர்கள் பெருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய சோமசுந்தரத்தை தற்போது ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here