தஞ்சாவூர், ஏப். 19 –
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நேற்று வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநரின் அறிவுறுத்தல் படி மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் இடுபொருள் விற்பனை செய்யும் 11 தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மற்றும் உர ஆய்வாளர் சாந்தி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வின் போது உரக்கடை விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பு புத்தக இருப்பில் உள்ள உரத்தின் அளவுடன் சரியாக உள்ளதா மற்றும் வேறுபாடு உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் யூரியா உரம் இருப்பில் உள்ளதா மற்றும் யூரியா உரத்துடன் உப பொருட்கள் ஏதேனும் விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் இணைத்து விற்பனை செய்யப்படுகிறதா, உரங்களின் விலை பட்டியல் கடையின் முன்னால் விவசாயிகள் பார்வைக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதா என்பது போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அனைத்து உரவிற்பனையாளர்களுக்கும் யூரியா மற்றும் உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கும் பொழுது அவர்களின் விருப்பமின்றி உப பொருட்கள் இணைத்து விற்கக் கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், அனைத்து உர விற்பனையாளர்களும் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக் குறித்து ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்கப்பட்டுள்ளது என்ற விற்பனை அறிக்கை விபரத்தை பிரதிமாதம் 22ஆம் தேதிக்குள் ஒரு ஆய்வாளர் வசம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினார்கள்.