குடவாசல், மார்ச். 10 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழ ஓகை கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் சுற்றுப்புற வட்டாரங்களிலிருந்து வருகைப் புரிந்து, சாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவிற்காக கடந்த ஆறாம் தேதி திங்கட்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி ஸ்ரீ பிரசன்ன பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி பூஜையுடன் ஆறு காலையாக பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்வில் ஆறாம் கால யாக பூஜையில் நாடி சந்தானம், தத்துவார்ச்சனையுடன் மஹாபூர்ணாஹூதி நடைபெற்று மஹாதீபாரதனையுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஆலயத்தை வலம்வந்து விமான கோபுரத்தை அடைந்தது. வானத்தில் கருடபகவான் வட்டமிட சரியாக 8.00மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், விழாவில் கிராம முக்கியஸ்தர்கள் சென்னை மும்பை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு வருகை தந்து கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தும் மேலும் கோபுர மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்கும பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்களும், பிரசாத பைகளும் வழங்கப்பட்டது.