பொன்னேரி, மே. 25 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத், மற்றும் பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட குழுவினரிடம் அதிமுக பொன்னேரி நகராட்சி உறுப்பினர்கள் கடந்த 2013 ஆம் வருடம் ரூபாய் 78 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டப் பணிகள் 10 வருட காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் இன்று வரையிலும் முடிக்கப்படவில்லை எனவும்,
மேலும் இப்பணிக்காக தோண்டப்பட்டு இந்நகர் முழுக்க ஆங்காங்கே உள்ளப் பள்ளங்களால், இந் நகரவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் எனவும், அதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்களும், ஏற்படுகின்றன என்றவாறு அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் அதிகாரியை அழைத்துப் பேசினார்கள். அப்போது, அவர்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் அப்பணிகள் முடித்து விடுகிறோம் என உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.