புதுச்சேரி, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ளது கங்கை முத்து மாரியம்மன் கோவில் இந்த கோவிலின் பால்குட ஊர்வலமானது இன்று நடைபெற்றது.
அதில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த உத்ரேஷ் (28) என்ற இளைஞரின் தாய், மற்றும் சகோதரியும் பால்குடம் எடுத்து சென்றனர். அப்போது உத்ரேஷும் அவர்களுடன் சென்றார். கோவில் அருகே ஊர்வலம் வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தாங்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு உத்ரேஷை சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
அதில் படுகாயமடைந்த உத்ரேஷை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலையே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட உத்ரேஷ் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியின் நகரப்பகுதியில் கோவில் பால்குட ஊர்வலத்தின் போது இளைஞர் ஒருவரை அவரது தாய் மற்றும் சகோதரி கண்முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.