பொன்னேரி, மார்ச். 11 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது.
இந்நிலையில் இக்கடையில் இன்று காலை கந்தனும் அவரது கடையில் பணிப் புரியும் ஊழியர் ஹரியும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இக்கடையில் உள்ள இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கி கடையில் இருந்த பெட்ரோல் மற்றும் ஆயில் உள்ளிட்டவைகளில் பற்றிக்கொண்டது, இதனால் வெடி சத்தத்துடன் தீ மேலும், சிதறி கரும்புகையை எழுப்பி தீ எரிய தொடங்கியது. இதனால் கடையில் இருந்து கந்தன் மற்றும் ஹரி இருவரும் அலறியடுத்தபடி சாலைக்கு ஓடி வந்தனர்.
மேலும் இவ்விபத்துக்குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்பு படை வீரர்கள் மெக்கானிக் ஷாப்பில் எரிந்துக் கொண்டிருந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இவ்விபத்தால் அருகில் இருந்த ஃபேன்சி ஸ்டோர், மற்றும் டீக்கடைகளிலும் தீ லேசாக பரவியதால் அந்தக் கடைகளின் ஷட்டரையும் உடைத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இத் தீ விபத்தால் மெக்கானிக் ஷாப்பில் இருந்த இருசக்கர வாகனங்கள், மற்றும் அருகில் இருந்த கடைகளில் இருந்த பொருட்கள் என சுமார் ரூ. 15 இலட்சம் மதிப்பிலான தீயில் கருகி நாசமானதென கூறப்படுகிறது. சேதம் குறித்த முழுவிபரம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இத் திடீர் தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டமும் பரபரப்பும் நிலவியது. மேலும் இவ்வபத்தினால் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ அதிஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.