தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார் அறக்கட்டளை ரூபத்தில் உதவ வந்த கும்பேஸ்வரன்.
கும்பகோணம் மகாமகம் குளம் அருகே ஜெகன்நாத பிள்ளையார் கோவில் மேல வீதிவை சேர்ந்தவர் மாரியம்மாள் . குடிக்கு அடிமையான கணவரால் திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே அவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி நிர்கதியாக நின்ற நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தூய்மை பணியாளராக சொற்ப ஊதியத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து தனது மகள் துர்காஸ்ரீயை படிக்க வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பார்த்துக்கொண்டு இருந்த வேலையும் பறிபோக , கும்பேஸ்வரர் வீதியில் உள்ள தனியார் உணவகத்தில் பாத்திரம் கழுவுவது ,வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் அந்த இலையை எடுத்து டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது கல்விக்காக தாய் படும் கஷ்டத்தை உணர்ந்த மகள் துர்காஸ்ரீயும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து தாய்க்கும் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். மேலும் பத்தாம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வி பயில போதுமான நிதிவசதி இல்லாத நிலையில் பணமில்லாமல் எங்கே தனது மகளின் படிப்பு நின்று விடுமோ என்ற பயத்தில் கும்பகோணம் நகரின் நடுநாயகமாக இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தினமும் இறைவனிடம் உதவி கோரி முறையிட்டு வந்துள்ளார் அந்த தாய் மாரியம்மாள்.
அத்தாயின் நிலைப்பற்றி கேள்விப்பட்ட ஜோதி அறக்கட்டளை என்ற தஞ்சையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் உடனடியாக தாய் மாரியம்மாள் பணிபுரியும் உணவகத்துக்கே நேரில் சென்று மாரியம்மாளின் மகள் துர்காஸ்ரீயின் இந்த ஆண்டு உயர்கல்விக்காக கோரியிருந்த தொகையை ரொக்கமாக வழங்கியதுடன் அடுத்த ஆண்டுக்கான கல்வித்தொகையும் கூடுதலாக வழங்கி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
மேலும் அவர்களின் வறிய நிலையை கருத்தில்கொண்டு பிரபல துணிக்கடைக்கு தாயையும் மகளையும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடைகளை அவர்களே தேர்ந்தெடுக்க வைத்து அதையும் அன்பளிப்பாக வழங்கினர் .
தாய் மாரியம்மாள் இது பற்றி கூறுகையில் குடிபழக்கத்திற்கு அடிமையான எனது கணவர் என்னையும் எனது மகளையும் ஆதரவின்றி கைவிட்டு சென்ற நிலையில் எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளுக்கு தரமான கல்வியை வழங்கி கலெக்டர் பதவியில் உட்கார வைப்பது என்று முடிவெடுத்தேன்.
அதனால் மகளின் படிப்பு செலவுகளுக்காக கிடைத்த வேலை எல்லாம் செய்தேன் , சொற்ப வருமானமாக இருந்தாலும் வைராக்கியத்துடன் மகளை படிக்க வைத்தேன் . பத்தாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும் மேற்கொண்டு படிக்க வைக்க நிதி வசதி இல்லாமல் எங்கே எனது மகளின் படிப்பு நின்று விடுமோ என்று தினமும் கண்ணீருடன் நான் பிறந்து வளர்ந்த இந்த கும்பகோணம் ஊரின் நாயகனாகிய ஆதி கும்பேஸ்வரனிடம் உதவி கோரி அழுது புலம்பியுள்ளேன்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று அந்த ஈஸ்வரனே உதவி செய்ய வந்தது போல் தஞ்சையில் இருந்து ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் நான் வேலை செய்யும் இடமான உணவகத்துக்கே நேரில் வந்து வெற்றிலை பூ பாக்கு சகிதம் நான் கோரியிருந்த என் மகளின் கல்விக்கட்டணத்தை வழங்கியதுடன் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தையும் சேர்த்து வழங்கியது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
எனது பிரார்த்தனை வீண் போகவில்லை , நான் தினமும் வணங்கிய அந்த ஈஸ்வரனே எனக்கு இவர்கள் ரூபத்தில் எனது மகளின் உயர்கல்விக்கான கல்வி கட்டணத்தை வழங்கியுள்ளார்கள் . மேலும் எனக்கும் எனது மகளுக்கும் புத்தாடைகளும் எடுத்துக் கொடுத்து அரிசி – மளிகை பொருட்களும் வழங்கினார்கள் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .





















