கும்பகோணம், ஏப். 04 –
கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீகோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் ஒன்றான சுவாமியின் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழந்தனர்.
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா பத்து நாட்களுக்கு இத்திருத்தலத்தில் நடைப்பெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அவ்விழாவிற்காக அத்திருத்தலத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கடந்த 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
மேலும் அதனைத்தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 07 ஆம் நாளில் இத்திருத்தலத்தில் திருக்கல்யாண வைபவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சீர்வரிசைகள் சமர்பித்தலும், உற்சவர் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள நலுங்கு வைபவமும், மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்ற பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, யாகம் வளர்த்து நாதஸ்வர மேள தாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.





















