கும்பகோணம், மார்ச். 30 –
கும்பகோணம் அருகே சுவாமிமலை தனியார் சிற்பகூடத்தில் இருந்து 5 அடி உயரமும், 4 அடி அகலமும் 186 கிலோ எடை கொண்ட பழமையான நடராஜர் சிலையை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். இச்சிலை நாளை சிலை திருட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.
கும்பகோணம் அருகேயுள்ள டி மாங்குடியில் சதீஷ் (எ) சதீஷ்குமார் என்பவரின் சிற்ப கூடத்தில் பழமையான சுவாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், நீதிமன்ற முன்னனுமதியுடன், சம்மந்தப்பட்ட இடத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜராம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5 அடி உயரமும், 4 அடி அகலத்தில், 186 கிலோ எடையுடன் கூடிய தொன்மையான நடராஜர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,
இதற்குரிய சரியான ஆவணங்கள் இல்லாததால் இந்த சிலையினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். இந்த சிலை, தகவல் கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் விரைந்து செயல்பட்டு, சிலையை கைப்பற்றி பறிமுதல் செய்த தனிப்படையினரை, காவல்துறை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்,
கைப்பற்றப்பட்ட இந்த சிலை நாளை, சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.