pic file copy
திருவண்ணாமலை மார்ச். 08 –
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின் உதவிக்காக ஒருவரை வைத்திருந்தனர். பெண்கள் போட்டக் கோலங்கள் காண்போர் கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டு இருந்தது. இதில் கொரோனா, சுற்று சூழல் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட கோலங்களை பலர் வரைந்திருந்தனர்.
போட்டியாளர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடுவர்கள் மூலம் கோலங்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு 4 பேருக்கும், 2 ஆம் பரிசு 4 பேருக்கும், 3 ஆம் பரிசு 4 பேருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டது.
கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் விழா ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, சிவா எலட்ரானிக்ஸ் விமல், தொழிலதிபர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
இதில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2-ம் பரிசாக எல்.இ.டி. டி.வி., 3-ம் பரிசாக வாஷிங்மெஷின் வழங்கப்பட்டது. மேலும் 200 பேருக்கு ஆறுதல் பரிசாக ரூ.500 மதிப்புள்ள துணி எடுப்பதற்கான கூப்பன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை அம்மு தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பச்சையப்பாஸ் மேலாளர்கள் கந்தவேல், மணிகண்டன், விற்பனை பிரிவை சேர்ந்த வாசு மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.





















