சென்னை. ஜன.20 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25,000/- உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழக பாரம்பரிய கலைகளை போற்றி பேணி பாதுகாத்து வளர்ப்பதற்கு, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்க் கலைகளை அங்கீகரிக்கும் வகையில் 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மன்றத்தின் வாயிலாக மாநிலங்களுக்கிடையே கலைக்குழுக்களை பரிமாற்றம் செய்தல், மாநில அளவில் கலைமாமணி விருது வழங்கும் திட்டம், தொழில்முறை நாடகக் குழுக்கள் மற்றும் நாட்டிய நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பல்வேறு கலை விழாக்களை நடத்துதல், தொன்மை வாய்ந்த அரிய கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருமதி ச. செல்வி, திருமதி ஆ. கோமதி,
திருமதி ஈ. நாகம்மாள், திருமதி க. ராமலட்சுமி, திருமதி மு. அழகரக்காள்,
திருமதி எஸ். ஸ்ரீகலா, திருமதி ஆர். கங்காதேவி, திருமதி ஆர். முத்துலெட்சுமி, திருமதி சா. அந்தோணியம்மாள், திருமதி ச. மலர்வள்ளி, திருமதி பா. ஜோதி, திருமதி ஆர். மாரியம்மாள், திருமதி ஆர். சரஸ்வதி, திருமதி எம். தனம், திருமதி எம். சங்கீதா ஆகிய 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25,000/- உதவித் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஆர். காந்தி, உறுப்பினர் செயலர் மு. இராமசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.























