கும்பகோணம், ஜன. 4 –
திருவிடைமருதூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின், செங்கரும்புடன், பொங்கல் பரிசு தொகுப்பு பையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையினை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், செங்கரும்பு பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பை வழங்குகிறது. இதனை திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன் இன்று நண்பகல், திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் சுண்ணாம்புக்காரத்தெருவில் உள்ள நியாய விலை கடையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த நியாய விலை கடையில் உள்ள 1, 423 பயனாளிகளுக்கு நாள்தோறும் 200 என்ற அளவில் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியல், திருவிடைமருதூர் பேரூராட்சி செயலாளர் சுந்தர ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொறடா கோவி செழியன்,
திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட 113 நியாய விலை கடைகள் மூலம், 68 ஆயிரம் பயனாளிகளுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பை வழங்கும் நிகழ்வு இன்று முதல் தொடங்கப் பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் வகையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ஒவ்வொரு கடையிலும் நாள்தோறும் 200 பயனாளிகளுக்கு வழங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் .
பேட்டி : 1. கோவி செழியன், அரசு தலைமை கொறடா























