ஆவடி, டிச. 21 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார் இனிப்பகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் இனிப்பகம் வாசலில் இருசக்கர வாகனம் திருடுப்போனது. இதுக்குறித்து அந்த வாகனத்தின் உரிமையாளர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி காவல் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி உத்தரவின் பேரில், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையை அத்தனிப்படை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பருத்திப்பட்டு சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் பைக்கில் வந்த ஒரு வாலிபரை தனிப்படை காவலர்கள் மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது, காவலர்களிடம் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தார். இதனையடுத்து, தனிப்படை காவலர்கள் அவரிடம் இரு சக்கர வாகனத்திற்குரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது, அவரிடம் அதற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவலர்கள் அவரை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அவர் வேலூர் அருகே குடியாத்தம், கலாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (38) என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் ஆவடி, பூந்தமல்லி, மாதவரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக், மொபட்டுகளை திருடி அந்த இரு சக்கர வாகனங்களை ஆவடி அம்பத்தூர் திருவள்ளூர் திருத்தணி போன்ற ரயில் நிலையங்கள் அருகே உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அந்த வாகனங்களை பதுக்கி வைத்து உள்ளதாகவும், கடந்த 2014ஆம் ஆண்டு ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றனர். அதே போன்று தமிழ்செல்வன் வேலூர் மாவட்டத்தில் அரசு துறையில் ஊழியராக பணியாற்றியவர் என்பதும், இவரை அரசு துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்ததும், இவர் மீது 12க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 11 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். முன்னாள் அரசு ஊழியர் திருட்டு வழக்கில் கைது செய்து இருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















