வலங்கைமான், மார்ச். 26 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ‘பாடை காவடி’ எனும் திருவிழா மிகவும் உலக பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்திருவிழாவில் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அத்தெய்வத்திற்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதும் வழக்கமாக இப்பகுதியில் இருந்து வருகிறது.
அதுப்போன்று இவ்வருடமும் இப்பங்குனித் திருவிழா கடந்த 11. 03. 2023 அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 13. 03 .2023 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அதனைத்தொடர்ந்து, கடந்த 20. 03 .2023 அன்று முதல் ‘ஞாயிறு திருவிழா’ தொடங்கி, விழாவின் முக்கிய நிகழ்வான ‘பாடை காவடி’ திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மக்கள் தங்களுக்கு உயிர் பிச்சை வேண்டி வலங்கைமான் மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வார்கள். பின்னர் அவர்களின் நோய் குணம் அடைந்தவுடன் தங்களை உயிர் பிழைக்க வைத்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
அவர்களின் வேண்டுதலின்படி, மூங்கில் மூலம் ஒரு பாடயை கட்டி, அதில் நேர்த்திக்கடன் செய்பவரை படுக்க வைத்து, அவரது உறவினர்கள் பாடையை தூக்கிக்கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுவார்கள். பிறகு நேர்த்திக் கடனை செலுத்திய பின் கோவில் பூசாரி அபிஷேக நீரை பாடையில் படுத்திருப்பவர் மீது தெளித்து எழுப்புவார்..
இந்த விழாவில், பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுமார் 5000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 03.04.22 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும், அதனைத் தொடர்ந்து 10.04.2022 அன்று நடைபெறும் ‘கடை ஞாயிறு’ திருவிழாவுடன் பங்குனி பெருவிழா முடிவடைகிறது.