திருவாரூர், அக். 10 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இப்பேருந்து தினந்தோறும் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கு நாகப்பட்டினம் நன்னிலம் வழியாக கும்பகோணத்திலிருந்து பெங்களூர் செல்வது வழக்கம். இந்நிலையில் இரண்டு நாட்களாக வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் கும்பகோணம் வழியாக சென்றுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அரசவணங்காடு கீழத்தெரு அருகே வளைவான பகுதியில் பேருந்து செல்லும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது.
ஓட்டுநர் சாமர்த்தியமாக கையாண்டதன் காரணமாக எந்தவித அசம்பாவிதம் நடைப்பெறவில்லை,. அதனைத் தொடர்ந்து பயணிகள் பேரூந்திலிருந்து இறக்கி விடப்பட்டு மாற்று பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து உடனடியாக குடவாசல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவ்விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.