திருவள்ளூர், ஜூன். 11 –

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தை மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நிலைக் குறித்து நலம் விசாரித்தார். பின்பு க.சுந்திரத்தின் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அவரது மூன்றுமாத பேத்திக்கு திராவிடம் என்ற அடையாளத்திற்குள் செல்வி எனும் சொல்லை இணைத்து திராவிடச் செல்வி எனப் பெயர் சூட்டி அக்குழந்தையை திராவிடச்செல்வி என அழைத்து அவர் மனம் மகிழ்ந்தார்.

முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் இருமுறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சரிடம் இருந்து விடைப்பெற்று கும்மிடிப்பூண்டி சென்றார். அங்குள்ள ஐயர் கண்டியிலுள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைப்பெறும் ஆஸ்கர் விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் மற்றும் மருமகன் ரியாஸ்தீன் சேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் உடன் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பூச்செடிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here