மீஞ்சூர், ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது சிறுளப்பாக்கம் ஊராட்சி, மேலும் இவ்வூராட்சியில் வெப்பத்தூர், அண்ணாமலைச்சேரி காலனி, குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவ்வூராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என அக் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் அந் நிர்வாகம் எடுக்காமல் அலட்சியப் போக்கோடு இருந்து வருவதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் அப்போக்கினை கண்டிக்கும் வகையிலும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துத்தர வலியுறுத்தியும் இன்று அக்கிராமத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த பொதுமக்களும், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்டவர்கள் அக்கிராம மக்களை சந்தித்தனர்.
அப்போது அக்கிராம மக்கள் எங்கள் பகுதிக்கு கடந்த மூன்று வருட காலமாக எந்தவித அடிப்படை வசதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன் செய்து தரவில்லை எனவும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரை எதிர்த்து கேள்வி எழுப்பும் கிராமப் பெண்களை தரக்குறைவாக பேசி வருகிறார் என்றவாறு அவர்களிடம் குற்றம் சாட்டினார்கள். இவ்வார்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் அரசுஅம்மாள், வார்டு உறுப்பினர்கள் ஜெயராமன், மணிகண்டன், ரஜினி, உள்ளிட்டவர்களும், 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.