கும்பகோணம், டிச. 01 –
கும்பகோணத்தில் சோதனைக்காக வணிக வரி அலுவலர்கள் பொருட்களை வாங்கும் முறையினை கைவிடக்கோரி 2 மணி நேரமாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டும், பின்பு அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று வணிகவரி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் வணிக வரித்துறையினர் கடைகளுக்குள் வந்து டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி அதற்கு உரிய ரசீது இல்லை எனக் கூறி அபராதம் விதிப்பது, அது போலவே சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு, சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் துறைமுக சரக்ககங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களை மாநில எல்லைகளில் வைத்து வரி ஆய்வு சோதனை செய்தால், வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
எனவே, வணிக வரித்துறையினரால் சில்லறை விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்படும் டெஸ்ட் பர்சேஸ், சரக்கு வாகனத்தனிக்கை போன்றவற்றை உடனடியாக கைவிட கோரி. வணிகர்களுக்கு வரி செலுத்தும் முறைகள் குறித்து உரியபயிற்சியும், விழிப்புணர்வுகளும் ஏற்படுத்திட கோரியும். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காலை 10 மணி முதல் மதியம் 12 வரை மாநகரத்திற்குள் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வணிகர்கள் மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்திற்கு காந்தி பூங்காவிலிருந்து முக்கிய வீதி வழியாக பாலக்கரை அருகிலுள்ள மாநில வணிகவரித்துறை அலுவலகம் வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று மாநில வணிகவரி அலுவலகத்தில் மாநில வரி அலுவலர் அருணாச்சலத்திடம் வணிகர் சங்க தலைவர் மகேந்திரன் தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, துணைத்தலைவர் ரமேஷ்ராஜா, துணைச் செயலாளர்கள் வேதம்முரளி, பொருளாளர் கியாசுதீன் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான வணிகர்கள் உடன் இருந்தனர்.