கும்பகோணம், மே. 04 –
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி கேட்டதற்கு இந்த கேள்வி வேண்டாம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சனூர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை பாக்கி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆதீனம் பதில் கூறுவதற்கு முன்னரே அங்கிருந்த சிவபுரானியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சிலர் செய்தியாளர்களை அங்கிருந்து வேக வேகமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் செய்தியாளர்களுக்கும் சிவக்குமார் ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனம் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிலர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி தர்ணாவில் இருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் கஞ்சனூர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது .