திருவாரூர், மே. 20 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் நாடாகுடி கிராமத்தில் மகா மாரியம்மன், காளியம்மன் மற்றும் பெரியாச்சி ஆகிய தெய்வங்கள் அமர்ந்து அருள்பாலித்து வரும் இவ்வாலயம் 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்யப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை யாக பூஜைக்கான திரவிய பொருட்கள் எடுத்து வரப்பட்டு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.
மஹாதீபாரதணையுடன் புனிதநீர் அடங்கிய கடங்கள் யாக சாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து சரியாக காலை 10 மணியளவில் விமான கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
அத்துடன் ஆலயத்தின் உள்ளே விநாயகர் மகாமாரியம்மன் மகா காளியம்மன் காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்துடன் மஹாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை நாடாகுடி சங்கரன் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர்.